ஓணம் பண்டிகை: கேரளத்தில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
கேரளத்தில் வருகிற 26-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 10 நாட்கள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான அத்தப்பூ கோலத்தை மக்கள் தங்கள் வீடுகளில் தினமும் அலங்கரிப்பது வழக்கம். இதற்காக பல்வேறு வண்ண மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.அஸ்த நட்சத்திர தினமான நேற்று மாநிலம் முழுவதும் அத்தம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஓணம் பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வீடுகளில் அத்தப்பூ கோலம் அமைக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பூக்களை வாங்குவதற்காக மக்கள் பூக்கடைகள் மற்றும் பூ மார்க்கெட்டுகளுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர்.இதன் காரணமாக பூ மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செண்டு மல்லி, செவ்வந்தி, அரளி, வாடாமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆரஞ்சு நிற செண்டு மல்லி கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரையும், மஞ்சள் நிற செண்டு மல்லி ரூ.150 முதல் ரூ.250 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளை நிற செவ்வந்தி கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையும், நீல நிற செவ்வந்தி ரூ.400 முதல் ரூ.700 வரையும் விற்கப்படுகிறது. வாடாமல்லி கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், அரளிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், சிவப்பு ரோஜா ரூ.400 முதல் ரூ.600 வரையும் விற்பனை ஆகிறது.அத்தப்பூ அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் இலைகளுக்கும் தற்போது தேவை அதிகரித்துள்ளது. பன்னீர் இலை ஒரு கட்டு ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு, கோவை, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொச்சிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் பூக்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மல்லிகை பூவின் விலையும் உயர்ந்துள்ளது.