ஆதவ் அர்ஜுனா பேசும் வரை அவை அமைதியாகத்தான் செல்கிறது.. - பிரேமலதா விஜயகாந்த்
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பின்னரே வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே பேரவை நடைபெறுகிறது என்று தெரிவித்தார். ஆனால், கடந்த 3 முதல் 4 நாட்களாக பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்து வருவதாகவும், உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதால் அவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுவதாகவும் கூறினார். இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், பேரவையில் பேசுவதற்காக உறுப்பினர்கள் தேர்வுக்குத் தயாராகும் அளவுக்கு தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட பிரேமலதா, மக்களின் பிரச்சினைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே விவாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
எஞ்சிய நேரம் பெரும்பாலும் வாக்குவாதத்திலேயே கழிகிறது என்றும், அனைத்து உறுப்பினர்களுக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத நேரத்தில் சட்டப்பேரவை அமைதியாக நடைபெறுவதாகவும், அவர் பேசத் தொடங்கியதும் பிரச்சினைகள் உருவாகுவதாகவும் கூறினார். இது சட்டமன்றம் என்றும், சண்டை நடைபெறும் இடம் அல்ல என்றும் குறிப்பிட்ட அவர், ஆதவ் அர்ஜுனாவை பேச அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.