பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழக மக்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கியங்கள் தொடர்பான அவரது உரைகளும் பரவலாக அறியப்பட்டவை. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு அவர் உரையும் எழுதியுள்ளார். சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
மேலும், சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்காமல், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை வழங்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சாலமன் பாப்பையாவின் உடல் தத்தநேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.