அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை: திவ்யா சத்யராஜ் கடும் விமர்சனம்
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ், அன்பில் மகேஸ் வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், தொடர் மின்வெட்டு, லண்டன் விவகாரம், விலைவாசி உயர்வு, பட்டினப்பாக்கம் மக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள், டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களால் அரசுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை திசைதிருப்புவதற்காக சோதனை நடவடிக்கை பயன்படுத்தப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.