தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடாக நடைபெற்ற செங்கற்பட்டு மாநாட்டில், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு இருப்பதை ஏற்க முடியாது என்ற சமத்துவக் கருத்து வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சமத்துவக் கொள்கையை தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் கொண்டு சென்ற பெரியார், தமிழக மக்கள் தன்மானத்துடன் வாழ வழிகாட்டியவர் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், சமத்துவக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரவலாக்கிய தலைசிறந்த ஆளுமையாக பெரியார் திகழ்ந்ததாகவும், சமூகநீதிக்காக தொடர்ந்து போராடி அரசியலமைப்பின் முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்த துணிச்சலான போராளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
பெண்களின் விடுதலைக்காக பெரியார் முன்னின்று குரல் கொடுத்ததையும் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியுள்ளார். ஆண், பெண் சமத்துவமே மனித சமத்துவத்தின் அடிப்படை என்ற கருத்தை அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் என்றும், சுயமரியாதையுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்ற சிந்தனையை மக்களிடம் விதைத்தவர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். சாதி மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான கொள்கைகளுடன் பெரியார் தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, அவரது புகழை போற்றுவதுடன், மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் எந்த சமரசமும் இன்றி தொடர்ந்து பயணிப்போம் என உறுதியேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.