நெல்லை மாவட்டம் களக்காடு அருகே 33 வயது விவசாயி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கீழ தேவநல்லூரைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மகன் ரமேஷ் ராம் (33). விவசாயியான இவர் நேற்று இரவு மணிமுத்தாறு கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை வழிமறித்துள்ளனர்.தொடர்ந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேஷ் ராமை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
Advertisement
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரமேஷ் ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் கொடைவிழாவில் ரமேஷ் ராம் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.