இளம் குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை மிகவும் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும் என சுகாதாரப்பணிகள் இயக்குனரகம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மருந்துகளை பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட கலவை மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை குறிப்பிடும் எச்சரிக்கை வாசகத்தை, மருந்து பாட்டில்களின் லேபிள்களில் அச்சிடுமாறு மருந்து ஆலோசனைக் குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், விரைவில் எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய இருமல் மற்றும் சளி மருந்து பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.