நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய ஆடம்பரத் தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர் பவனியைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் திரண்டனர். இதனால் பேராலய வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி பெரிய தேர் பவனியை முன்னிட்டு மாலை 5.30 மணியளவில் பேராலயத்தில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு மற்றும் நவநாள் ஜெபம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பங்கேற்றனர். திருப்பலி நிறைவடைந்த பின்னர், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பெரிய தேர் பவனி இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. முதலில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 6 சிறிய தேர்கள் (சப்பரங்கள்) அடுத்தடுத்து புறப்பட்டன. அவற்றில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா உள்ளிட்ட சொரூபங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சிறிய தேர்களை பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். அவற்றைத் தொடர்ந்து அன்னை ஆரோக்கிய மாதாவின் சொரூபம் தாங்கிய பிரம்மாண்ட பெரிய ஆடம்பரத் தேர் மின்னொளி அலங்காரத்தில் பேரொளியுடன் பவனி வந்தது. இந்தப் பெரிய தேரை ஆண் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் சுமந்து சென்றனர். பக்தர்கள் பக்தி கோஷம் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்ட தேர் பவனி கடற்கரை சாலை, திராவிடா ஓட்டல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், “மரியே வாழ்க... மாதா வாழ்க...” என பக்தி கோஷங்களை எழுப்பினர். பலர் மெழுகுவர்த்தி ஏந்தியும், தேரின் மீது மலர்களைத் தூவியும் வழிபட்டனர். சிலர் முழங்காலிட்டு கண்ணீர் மல்க தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டு, மின்னொளியில் ஜொலித்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் பெருமளவில் திரண்ட பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 525-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடற்கரை பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகளுடன் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பேராலய வளாகம் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாளை பெருவிழா நிறைவு அன்னையின் பிறந்தநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பேராலயத்தில் சிறப்பு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மாலை அன்னை மாதாவின் கொடி இறக்கப்பட்டு, 11 நாட்களாக நடைபெற்று வரும் வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா முறைப்படி நிறைவு பெறுகிறது.