வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கணவர் உயிரிழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் 7 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவசம்பட்டு கிராமம் யாதவர் வீதியைச் சேர்ந்த பூபாலன் - கலா தம்பதியின் மகன் சரத்குமார் (34). ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவருக்கும், 28 வயதான மோனிஷாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும், மோனிஷா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி சரத்குமார் திடீரென உயிரிழந்தார். கணவரின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருந்த மோனிஷா, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.