வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்புவதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமான போலி ஜி-மெயில் கணக்குகள் உருவாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் இந்திய போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு இந்தியா மிகப்பெரிய பயனர் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதனை சில கும்பல்கள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குஜராத்தில் இருந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படும் ஒரு கும்பலின் மின்னஞ்சல் தொடர்பான செயல்பாடுகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்காக 5 லட்சத்து 13 ஆயிரத்து 847 போலி ஜி-மெயில் கணக்குகள் மற்றும் அவற்றுக்கான கடவுச்சொற்கள் உருவாக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையில் அந்த கும்பல் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போதும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு அனுப்பப்பட்ட இந்த மிரட்டல்கள் தொடர்பாகவும் கூகுள் நிறுவனத்திடம் இந்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.