சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும், திருவொற்றியூரில் இளைஞர் பிரதீப் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதற்கு உதாரணமாக இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், தமிழகம் கந்துவட்டி கும்பல்களின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டதற்கு திருவொற்றியூரில் இளைஞர் பிரதீப் கொல்லப்பட்ட சம்பவம் வெளிப்படையான சாட்சியாக உள்ளது. கந்துவட்டி கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் காவல் நிலையம் முன்பு நின்று ஊடகங்களிடம் பிரதீப் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாளே அவர் நடுரோட்டில் விரட்டிச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தை நாடிய இளைஞரையே காப்பாற்ற முடியாத நிலையில் காவல்துறை எதற்காக உள்ளது என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உதவி கேட்டு வந்த பிரதீப்புக்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக, காவல் ஆய்வாளர் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சமூக விரோதிகளிடம் அமைதியை விட்டுக்கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், இந்தப் படுகொலைக்கு தவெக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு நீதி கிடைக்க, கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் காவல் ஆய்வாளர் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டசபையில் வீர வசனங்களை பேசுவதைவிட, தெருக்களில் நடைபெறும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதே ஒரு ஆட்சியாளரின் உண்மையான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.