விழுப்புரத்தில் பிரபல ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 23 வயது இளைஞரை நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் அருகே பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை தனுஷ் (23) என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர், உணவுக்கான கட்டணத்தை ஊழியர்கள் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று இரவு வழக்கமான வியாபாரம் முடிந்ததும் ஹோட்டல் பூட்டப்பட்டது. நள்ளிரவில் அங்கு மீண்டும் வந்த தனுஷ், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பூட்டப்பட்டிருந்த ஹோட்டல் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.போலீஸ் நிலையத்திற்கு அருகிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும் இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பெட்ரோல் குண்டை வீசியது விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த தனுஷை போலீசார் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், ஹோட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை கேட்டதால் ஏற்பட்ட கோபத்தில் பூட்டப்பட்டிருந்த ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக தனுஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.தனுஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.