தமிழகம் முழுவதும் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் விலை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்த தேங்காய்களை உடனடியாக விற்பனை செய்யாமல் இருப்பு வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. தேங்காயை காட்டிலும் இளநீர் மூலம் அதிக வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் பலரும் இளநீர் உற்பத்திக்கு மாறுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடும் வெப்பம், நீர்ப்பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதுடன், ஏராளமான தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் உற்பத்தி மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை வேகமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால் அறுவடை செய்த தேங்காய்களை விற்பனை செய்யாமல், விளைநிலங்களிலேயே குவித்து வைத்து இருப்பு செய்து வருகின்றனர். தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காயின் விலை ஒரு கிலோ ரூ.52 வரை உயர்ந்துள்ளது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ தேங்காயின் விலை ரூ.70-ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய்களை இருப்பு வைப்பதற்கு அதிக செலவோ, கூடுதல் பராமரிப்போ தேவையில்லை என்பதால், தோப்பிலேயே குவித்து வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.