விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் வறட்சியால் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை தற்போது வேகமாக அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.500-க்கு விற்பனையான மல்லிகை, இன்று ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நேற்று ரூ.400-க்கு விற்பனையான முல்லை பூவின் விலை இன்று கிலோ ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது. ரோஜா பூ கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், செவ்வந்தி ரூ.100-ல் இருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளன. மேலும், சம்பங்கி கிலோ ரூ.700-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.