விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வரவுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்திருப்பது பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய முயற்சிக்கும் பொதுமக்கள், அதிக கட்டணம் காரணமாக கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்னையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கல்வி, வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. பொதுவாக வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஓரளவு உயர்வது வழக்கம். ஆனால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த முறை கட்டண உயர்வு பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் சென்னை–நாகர்கோவில் வழித்தடத்திற்கான ஸ்லீப்பர் பேருந்து கட்டணம் வழக்கமான நாட்களை ஒப்பிடும்போது சுமார் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சாதாரணமாக ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை இருக்கும் கட்டணம் தற்போது ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை சென்றுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை நாளில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கட்டண உயர்வு தொடர்கிறது. செப்டம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளுக்கான பயணச்சீட்டுகளில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி குடும்பத்தினருடன் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட விரும்பும் நடுத்தர வர்க்கத்தினர், ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததால் வேறு வழியின்றி அதிக கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில் டிக்கெட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி, பண்டிகை காலங்களில் கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்துவது நியாயமற்றது என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.