விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பண்டிகை திங்கட்கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில், இன்று வெள்ளிக்கிழமையே பயணத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் திடீரென உயர்ந்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.