சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்தினருடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அதிகாலை வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வி.எஸ்.பாபு மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை சீராகவும் திருப்திகரமாகவும் இருப்பதாகவும், பல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.