வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 2,655 சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 760 சிறப்பு பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 520 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இன்று 115 பஸ்களும், நாளை 115 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளில் தலா 70 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பயணிகள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.