கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 2 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (செப்.19) மற்றும் நாளை (செப்.20) ஆகிய 2 நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் 11 வழித்தடங்களில் நடைபெறுகின்றன. அதன்படி, நாகர்கோவில்–சொத்தவிளை கடற்கரை, மேல்புறம்–குழித்துறை, நாகர்கோவில்–சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம்–கன்னியாகுமரி, தோவாளை–பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு–மிடாலம், அஞ்சுகண்கலுங்கு–தேங்காய்பட்டணம், செருப்பாலூர்–திற்பரப்பு, வைகுண்டபுரம்–வெட்டுமடை, மேல்புறம்–குழித்துறை மற்றும் பம்மம்–குழித்துறை ஆகிய பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, மேற்கண்ட பகுதிகளில் செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபானக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மட்டும், சம்பந்தப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் நேரம் முதல் அது நிறைவடையும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.