இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு துணிச்சலுடன் எதிர்த்து நின்றவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, இன்று (05.09.2026) சனிக்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், காந்தி மண்டபத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்கிய வ.உ.சிதம்பரனார் பயன்படுத்திய செக்கிற்கும் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர், மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் M.அருள் பிரகாசம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.