முதல்-அமைச்சர் விஜய், அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12-ந்தேதி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு சென்ற விஜய், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியில் நடத்தும் நடைமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டார். பின்னர், நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அடுத்த 2 நாட்களில் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றின் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், 7 நாள் லண்டன் பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் காரில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.