தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ‘டோரதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. திரைப்படப் பணிகளில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், கடந்த இரு நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. விமான நிலையத்தில் கைப்பையுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலானது. லண்டனில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்-அமைச்சர் விஜய் சென்றுள்ள நிலையில், அங்கு நடைபெற உள்ள அஜித்குமாரின் கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி சில திரைப்பிரபலங்களும் லண்டனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றதாக வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். கனடாவில் நடைபெறும் டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்படுவதற்காக தான் சென்றிருப்பதை குறிப்பிட்ட அவர், “ஆமா கரெக்ட்.. லண்டனில் தானே டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது!” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.