லண்டனில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டில் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று (14.09.2026) சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப.வும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வில் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.