வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அரசு விற்பனை மையங்களில் வரும் 3-ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போரின் தாக்கத்தால் வாகன எரிவாயு விலை உயர்ந்து, போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாக கூறினார். இதன் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.குறிப்பாக, வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, வரும் 3-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளிலும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.