சென்னையில் மாநகரப் பேருந்துகளை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 3,600 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.8 கோடி மதிப்பில் ஏ.சி. வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.இதன் அடுத்த கட்டமாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கம் பகுதியில் நவீன குளிர்சாதன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.