ரூ.5 வரை உயர்வு... தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

ரூ.5 வரை உயர்வு... தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்

ரூ.5 வரை உயர்வு... தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், பயணச்சீட்டு கட்டணத்தை தன்னிச்சையாக ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, மதுரை, நாகர்கோவில், ஊட்டி ஆகிய பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற இடங்களில் சுமார் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இதற்கிடையில் டீசல், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், தனியார் பேருந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை கட்டண உயர்வு தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர், கடலூர், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில தனியார் பேருந்து நிறுவனங்கள் பயணச்சீட்டு கட்டணத்தை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், கட்டண உயர்வு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது கவலை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், வேறு வழியின்றி சில பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் எடுத்துரைத்ததாக கூறினர். இதையடுத்து அந்த பேருந்துகளில் மீண்டும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு தொடர்பாக ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.