ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இந்த நிலையில், ரூ.2,000 வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், ரூபே டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் யுபிஐ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பல்வேறு இடங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை பரவலாக உள்ளது. விரைவாக பணத்தை அனுப்பவும் பெறவும் முடிவதால், பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் இதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை கையாளுதல், சர்வர் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த சூழலில், ரூ.2,000-க்கு அதிகமான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. இதற்கு மத்தியில், ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10 ஏ-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் மறைமுகமாக வசூலிக்கக்கூடும் என்ற கவலையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.