ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் அன்பில் மகேஷ்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் அன்பில் மகேஷ்

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் அன்பில் மகேஷ்

சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் பி.டி.அரசகுமார் மற்றும் அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியிலும், போரூரில் உள்ள திருமண மண்டபத்திலும் பி.டி.அரசகுமார் சந்தித்து பணம் வசூலித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதுடன், குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 177 பேர் புகார் அளித்துள்ளதாகவும், 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்குடன் தொடர்புடைய 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் 8 பென்டிரைவ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். சோதனை நிறைவடைந்தபோது, செப்டம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இதன்படி, போலீசார் அனுப்பிய சம்மனின் அடிப்படையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.