திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூரைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியருக்கு கடந்த 14-ம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிறந்த குழந்தையை விற்பனை செய்ய அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.இதுகுறித்த தகவலை அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த செய்யது - சம்ரின் தாஜ் தம்பதியினர் திருப்பத்தூர் வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில், அவர்கள் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியரிடம் இருந்து அந்த பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக ஆம்பூர் அருகே உள்ள உமராபாத் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை விற்றதாக கூறப்படும் ரஹ்மத்துல்லா - ஹவாமா மற்றும் குழந்தையை வாங்கிய செய்யது - சம்ரின் தாஜ் ஆகிய 4 பேரையும் சட்டவிரோதமாக செயல்பட்டதாக கைது செய்தனர்.மேலும், குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் அல்லது புரோக்கர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.