காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 25-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, கோவில் சன்னதி முழுவதும் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.500 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்திற்காக மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.