யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின்படி, வணிக நோக்கில் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.5,000 மதிப்பிலான வணிக யுபிஐ பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணமாகவும், ரூ.75,000-க்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது ரூ.300 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். அதேபோல், ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ.2,000-க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜோதிமணி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தக் கட்டணம் நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறு வணிகர்களின் நலனை பாதுகாப்பதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் யுபிஐ சேவை அனைவருக்கும் கட்டணமின்றி தொடர வேண்டும் என்றும் ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.