கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9,786 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் வினாடிக்கு 7,000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபோதிலும், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 7,598 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 10 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 8,618 கனஅடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.