ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தின் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மேகமலை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையல்ல என்று மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். வனத்துறைக்குச் சொந்தமான 5,072 ஏக்கர் நிலத்தில் 4,601 பேர் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் பணியே தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். பட்டா வைத்துள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முழுமையாக வனப்பகுதியை ஆக்கிரமித்து அமைந்துள்ள குறிப்பிட்ட குக்கிராமங்கள் மட்டுமே நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 75 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அவர்களுக்கு வன உரிமைப் பட்டா வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் விவேக் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.