பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ‘கணேஷ் மத் மந்திர்’ கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு முஸ்லிம் கலைஞர் ஒருவர் வண்ணம் தீட்டி அலங்கரித்துள்ளார்.கராச்சியில் வசிக்கும் மராட்டிய குடும்பத்தினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டுள்ள வெள்ளை நிற விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.தலையில் தொப்பியுடன் காணப்படும் அந்தக் கலைஞர், ஸ்பிரே பெயிண்ட் மற்றும் பிரஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிலையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நிறங்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்துள்ளார். இதன் மூலம் வெள்ளை நிறத்தில் இருந்த விநாயகர் சிலை அழகிய வண்ண அலங்காரத்துடன் காட்சியளிக்கிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கராச்சியைச் சேர்ந்த அமர் பிரகாஷ் என்ற மராட்டியர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.மத வேறுபாடுகளைக் கடந்து கலைக்கும் பக்திக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் இந்தக் காட்சி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.