முறைகேடாக வழங்கப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் ரத்து செய்ய உத்தரவு; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

முறைகேடாக வழங்கப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் ரத்து செய்ய உத்தரவு; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

முறைகேடாக வழங்கப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் ரத்து செய்ய உத்தரவு; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பழங்குடியினர் சமூகத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகளை தவறாக பயன்படுத்தும் நோக்கில், 2018 முதல் தற்போது வரை சிலர் முறைகேடாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்றிருப்பதாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சமூகநீதித்துறை செயலாளர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே வசித்து வருவதால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், 2018 ஜனவரி 1 முதல் 2026 மே 26 வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு காணிக்காரன், காணிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பதை மாவட்ட கலெக்டர்கள் விசாரிக்க வேண்டும் என்றும், முறைகேடாக வழங்கப்பட்டிருப்பது உறுதியானால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.