பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி, நாடு முழுவதும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நாம சங்கீர்த்தனம் மற்றும் ஆரத்தி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெருமாள் மற்றும் கிருஷ்ணர் கோவில்களில் உறியடி உற்சவமும் நடத்தப்பட்டது. சிறுவயதில் கண்ணன் கோபியர்களின் வீடுகளில் வெண்ணெய் திருடி உண்ட நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று பல்வேறு பகுதிகளில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் உறியடி விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. உயரத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட பானைகளில் வெண்ணெய், பால், மஞ்சள் நீர் அல்லது பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமாண்டமான மனித பிரமிடுகளை உருவாக்கினர். உயரத்தை எட்டி பானையைத் தாக்கி உடைத்து இலக்கை அடைய அவர்கள் ஆர்வத்துடன் முயன்றனர். சில பகுதிகளில் கண்களைக் கட்டிக்கொண்டும் உறியை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கிடையே, கூடியிருந்த மக்கள் எழுப்பிய ஆரவாரம், பானையை அடைய முயன்றவர்களைத் தடுக்க தண்ணீர் ஊற்றியது உள்ளிட்ட பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பிரபலங்களும் கலந்துகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். இதுபோல சில இடங்களில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. எண்ணெய் தடவப்பட்ட கம்பத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பரிசை கைப்பற்றுவதற்காக இளைஞர்கள் போட்டி போட்டு ஏறினர். தைரியத்தையும், குழுவாக இணைந்து செயல்படும் திறனையும் வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. உறியடி விழாவில் மனித பிரமிடு அமைப்பது சவால் நிறைந்ததுடன் ஆபத்தும் ஏற்படக்கூடியது என்பதால், பங்கேற்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போது ஏற்பட்ட விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புனேயில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் ஒரு பெண் உயிரிழந்தார்.