முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வசூலித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், திமுக நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலின்படி, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தர உயர்வு மற்றும் டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பி.டி. அரசகுமாருடன் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையே, சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அலுவலகத்திலும் சோதனை நடத்த போலீசார் சென்றுள்ளனர். அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அதன் பூட்டை உடைத்து சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.