மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பயண வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, நாளை (புதன்கிழமை) சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவையில் இருந்து 30 பஸ்கள், திருப்பூரில் இருந்து 30, ராமநாதபுரத்தில் இருந்து 30, அருப்புக்கோட்டையில் இருந்து 25, சிவகாசியில் இருந்து 30, ராஜபாளையத்தில் இருந்து 30, விருதுநகரில் இருந்து 10, தேனியில் இருந்து 30, திண்டுக்கல்லில் இருந்து 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.