தமிழக சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய திட்டங்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதேபோல், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடி செலவிடப்படும்.முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் ரூ.49 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப அறிவுசார், செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடுகளுக்கான மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் உருவாக்க ரூ.97 லட்சம் ஒதுக்கப்படும்.கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.தனியாக பயணம் செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளரையும் அழைத்துச் சென்று மாநகர, நகர தாழ்தள, விரைவு, டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையை அறிமுகப்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கப்படும்.மேலும், பார்வைக் குறைபாடுடைய மாணவர்களின் கல்விக்கு உதவும் வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை 2026-27-ம் கல்வியாண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது.மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வாழ்வாதார தேவைகளை கருத்தில் கொண்டு இந்த 9 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.