மரம் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: தாய் யானை பாசப்போராட்டம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

மரம் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: தாய் யானை பாசப்போராட்டம்

மரம் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: தாய் யானை பாசப்போராட்டம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் மரம் விழுந்து காயமடைந்த 2 வயது குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. நேற்று முன்தினம் மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வெளியேறிய குட்டி யானை, தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த இடத்திலேயே படுத்துக் கொண்டது. இதனை கவனித்த சோதனைச்சாவடி வன ஊழியர்கள் குட்டி யானையை எழுப்ப முயன்றனர். ஆனால் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. இதற்கிடையில்அங்கு வந்த தாய் யானை, குட்டியை சுற்றிச் சுற்றி வந்து அருகில் யாரும் செல்லாத வகையில் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் வன ஊழியர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். குட்டி யானை படுத்திருந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் செல்ல முயன்றபோதும், தாய் யானை அவர்களை துரத்தியது. இரவு நேரமானதால் கர்நாடக வனத்துறையினர் அங்கிருந்து திரும்பினர். இந்நிலையில், நேற்று காலை கால்நடை மருத்துவர் மற்றும் கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பட்டாசு வெடித்து தாய் யானையை அங்கிருந்து விரட்டிய பின்னர், படுத்திருந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குட்டி யானை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர் கூறுகையில், உயிரிழந்த ஆண் குட்டி யானைக்கு சுமார் 2 வயது இருக்கும் என்றும், அதன் கழுத்தில் மரம் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்ததாகவும் கூறினார். இதையடுத்து குட்டி யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.