மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: செப். 17 முதல் 20-ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து! மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் 20-ம் தேதி வரை அனைத்து தரிசன வரிசைகளிலும் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கவும், விழாவைக் காணவும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, ஒரே நேரத்தில் 9,000 பேர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் வகையில் 7 நுழைவு வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 448 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 70 முக அடையாளம் காணும் (Facial Recognition) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக 25 மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளில் 600 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.