மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது பார்வதி என்ற ஒரே ஒரு யானை மட்டுமே உள்ளது. உடல்நலக் குறைவால் பார்வதி யானை அவதிப்பட்டு வரும் நிலையில், கோவிலுக்கு மேலும் ஒரு யானையை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அசாமில் இருந்து 5 யானைகள் அழைத்து வரப்பட்டன. மேலும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், புதிய யானை கோவிலுக்கு வருவது சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அசாமில் இருந்து 5 வயதுடைய துர்கா என்ற யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. கோவிலுக்கு வந்த துர்கா யானைக்கு ஸ்தானீக பட்டர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து, கோவில் பணியாளர்கள் மலர்களைத் தூவி யானைக்கு வரவேற்பு அளித்தனர். அசாமில் அமைந்துள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து துர்கா யானை மதுரை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.