மதுரை செக்கானூரணி அருகே மேம்பாலத்தில் பைக்கில் சென்ற பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி அருகே உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த தவமணி என்ற பெண்ணின் சேலை எதிர்பாராதவிதமாக பைக்கில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்துள்ளார். அப்போது எதிர்திசையில் வந்த இளங்கிளி என்பவர், விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக தடுப்புச்சுவரை தாண்டி குதித்துள்ளார். ஆனால், அங்கிருந்த இடைவெளி பள்ளத்தில் அவர் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த தவமணிக்கு உடனடியாக உதவ யாரும் இல்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.