தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் சத்திய பாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாராபுரம் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளார். இதனால் தாராபுரத்தில் 5 முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சுகன்யா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் அவர் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அப்போது திமுக துணை பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொண்டர்கள் புடைசூழ மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்த அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.