மதுராந்தகம்: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ள தேர்தல் பணிக்குழு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, மதுராந்தகம் தொகுதி அடங்கிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் டி. சரத்குமாருக்கு தேர்தல் பணிகளில் முதன்மையான பொறுப்பு வழங்கப்படாமல், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பணிக்குழுத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில், அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் முதல் இடைத்தேர்தல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் தவெக தலைமை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் போது, அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடம் முக்கிய தேர்தல் பணிகள் ஒப்படைக்கப்படுவது வழக்கமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி. சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்து வருகிறார். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு பட்டியலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சரத்குமாருக்கு தேர்தல் பணியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், அவர் ஓரம்கட்டப்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தவெக தரப்பில் கூறுகையில், சரத்குமார் ஓரம்கட்டப்பட்டார் என்ற தகவலில் உண்மை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தல் வியூகத்தை கருத்தில் கொண்டே அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் சரத்குமார் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, வேட்பாளரின் வெற்றிக்காக முழு அளவில் பணியாற்ற சரத்குமார் தயாராக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், மாவட்ட பொறுப்பு அமைச்சரைத் தாண்டி தேர்தல் பணிக்குழுவில் தவெக தலைமை எடுத்துள்ள இந்த முடிவு, செங்கல்பட்டு மாவட்ட அரசியல் களத்தில் தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.