‘மண்டாடி’ திரைப்படத்தில் மீனவனாக நடித்ததைத் தனது பாக்கியமாகக் கருதுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டுள்ளன. இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களான ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் அதிகமாகப் பேசப்பட்டது. ராமநாதபுரத்தின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘மண்டாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூரி கூறியதாவது: ‘மண்டாடி’ படத்திற்காக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் பல மாதங்களாகக் கடலில் கடினமாக உழைத்தோம். அந்த உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. படத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பையும், திரையரங்குகளில் அவர்கள் கொண்டாடுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘மண்டாடி’ படத்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் கடலோர மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம். ஒரு மீனவனாக நடித்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்று சூரி தெரிவித்துள்ளார்.