சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவக்குமார் மற்றும் இளையராஜா ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டனர். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.