கோவையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட 165 பயணிகளுடன் சென்ற சென்னை – கோவை இண்டிகோ விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் வானில் பலமுறை வட்டமடித்தது. கோவையில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால், விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. இதற்கிடையே, மும்பையில் இருந்து மதுரைக்கு வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் வானில் வட்டமடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 125 பயணிகள் பயணிக்கும் அந்த விமானம், 45 நிமிடங்களுக்கும் மேலாக வானில் சுற்றி வருகிறது. மானாமதுரை அருகே மூன்று முறைக்கும் அதிகமாக வட்டமடித்த அந்த விமானம், தற்போது மேலூர் அருகே இரண்டு முறைக்கும் மேலாக வட்டமடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.