மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா - ஜோதிகா!

மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா - ஜோதிகா!

தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவரும் முதன்முறையாக ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்தனர். அந்தப் படம் வெளியான மூன்றாவது நாளான செப்டம்பர் 11-ம் தேதி சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இவர்களுக்கு பிறந்தனர். திரையுலகைச் சேர்ந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கை குறித்த பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளை கொண்டாடிய இந்த நட்சத்திர தம்பதி, அதன் சிறப்பு நிகழ்வாக மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிறிஸ்தவ முறைப்படி நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை சூர்யா - ஜோதிகா தம்பதி சமூக வலைதளத்தில் ‘தி சீக்குவல்’ (THE SEQUEL) என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவுடன் பகிரப்பட்ட பதிவில் ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையைப் பற்றிய தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். திருமண உறுதிமொழியை மீண்டும் எடுத்துக்கொண்ட இந்த நிகழ்வு, குறைகள் இல்லாத வாழ்க்கையை கொண்டாடுவதற்கானது அல்ல என்றும், விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகம் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததை நினைவுகூரும் தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை கொண்டாடுவது, குறைகளைத் தவிர்ப்பது, நன்றியுணர்வுடன் இருப்பது, ஆரோக்கியமாக இருப்பது மற்றும் சிறந்த தாயாக இருப்பது உள்ளிட்டவற்றை உறுதிமொழிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் சூர்யாவிடம் தொடர்ந்து குறைகள் நிறைந்த மனைவியாகவே இருப்பேன் என்றும், இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் சண்டைகளுக்குப் பிறகு சமாதானமாகி, அந்த அனுபவங்கள் தங்களது உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார். அனைத்துக்கும் மேலாக தங்களது நட்பை மதித்து பாதுகாப்பேன் என்றும், அடுத்த 20 ஆண்டுகளையும் குறைகளுடன் இருந்தாலும் முழுமையான புரிதலுடன் இணைந்து கடக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.