பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட 14 வயது இந்திய சிறுவன், அவரை நேரில் சந்திப்பதற்காக சட்டவிரோதமாக இலங்கைக்கு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமல் படகு மூலம் அந்த சிறுவன் இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது. படகுப் பயணத்துக்கான கட்டணமாக தனது தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் அவர் வழங்கியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையின் தலைமன்னார் பகுதியில் சிறுவனை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு, அவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சிறுவனுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான இலங்கை சிறுமி யார், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் தலைமன்னார் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.